Friday, 16 September 2016

கவிஞன் கண்ணதாசன்

வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னத கவிஞன் கண்ணதாசன். காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களை தன் திரைப்பட பாடல்களில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட அந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் இன்று... அந்த தன்னிகரில்லா கவிஞனை தமிழர்கள் நினையாத நாள் என்று? கண்ணதாசன் என்ற தமிழ் காவியத்தை அவரது நினைவுநாளில் புரட்டிப்பார்க்‍கிற ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு....


(நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை பாடலின் பல்லவியை ஒலிபரப்பவும் (படம் படித்தால் மட்டும் போதுமா))

திரைப்பட சூழலுக்‍காக கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்ட பாடல் இது என்றாலும், அவரது பாடல்கள் மீது பற்று கொண்ட லட்சக்‍கணக்‍கான ரசிகர்களுக்‍கு இந்த பாடல் வரிகள் கண்ணதாசனின் "அவை அடக்‍கம்" என்பதை ஏற்றுக்‍கொள்ள இயலாது. இந்த பாடலில் பொருட்பிழை இருப்பதாகவே எண்ணிக்‍கொள்வார்கள்.

திரையுலக கம்பனாக, வள்ளுவனாக வற்றாத கற்பனையுடனும், வளமான கருத்துக்‍களுடனும் வலம் வந்த கண்ணதாசன், முத்தையாவாக சூல்கொண்டது சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில்...

1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி இந்தக்‍ கவிதைச் சூரியனுக்‍கு சிறுகூடல்பட்டி கிழக்‍கானது. சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்‍கு 8வது பிள்ளையாக பிறந்தார் முத்தையா. வணிகர் மரபில் பிறந்த கண்ணதாசனுக்‍கு ஆரம்பக்‍கல்வி சிறுகூடல்பட்டியில் அமைந்தது. என்னதான் பள்ளிக்‍கல்வியைப் படித்தாலும், வாழ்க்‍கைக்‍ கல்வி, சமூகத்தில் தான் கிடைக்‍கும் என்பதாலோ என்னவோ? அவரது உயர்கல்வி எட்டாம் வகுப்போடு அவரை விட்டு தூர எட்டிச் சென்றுவிட்டது.

ஆனால் ஞானமோ கைகட்டி சேவகம் செய்தது கண்ணதாசனுக்‍கு. அவர் நாக்‍கில் குளித்து வந்து வார்த்தைகள் தமிழை மேலும் அழகாக்‍கியது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்த புரட்சிக்‍ கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல், கண்ணதாசனின் தமிழ் அமுதென்று பெயர் பெற்றது. சொந்த மண்ணைவிட்டு சென்னை வந்த கண்ணதாசன், பார்க்‍காத பணிகள் இல்லை. நதிக்‍குள் சமுத்திரத்தை அடைக்‍க முடியுமா?. கண்ணதாசன் கடல், அந்தக்‍ கடலில் இருந்து பொங்கி வந்த கவிதை அலைகள் ஓய்வெடுத்துக்‍ கொள்ள முடியாமல், ஓங்கி உயரமாக எழுந்து கொண்டே இருந்தது.

தன் திறமையை தீட்டிக்‍கொள்ள திரைப்படம் என்ற சாணைக்‍கல்தான் சிறந்தது என்ற முடிவுக்‍கு வந்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளை தேடி​போனார். திரைப்படத் துறை பல அவமானங்களையும், அனுபவங்களையும் கண்ணதாசனுக்‍கு கற்றுக்‍ கொடுத்துவிட்டு தனது கனவு தொழிற்சாலையின் கம்பீரமான கதவை மெதுவாக திறந்தது. ஜுபிட்டர் பிக்‍சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி" என்ற திரைப்படத்தில் "கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு. முதல் பாடலிலேயே, உடைந்து போன உள்ளங்களுக்‍கு ஒத்தடம் கொடுக்‍கின்ற ஆறுதலான வரிகள்.

பின்னர், பாட்டுப் பல்லக்‍கில் பயணம் செய்த இந்த ராஜ கவிஞனின் படைப்புகள்தான் எத்தனை? எத்தனை?. காதலா? வீரமா? பாசமா? தாலாட்டா?. மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்‍கும் கண்ணதாசனின் ஒரு பாட்டு கைபிடித்து நடந்தது... ஒரு பாட்டு கண்ணீர் துடைத்தது...

(பாடல் - உன் கண்ணில் நீர்வழிந்தால்... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி)

ஒரு பாட்டு காயங்களுக்‍கு மருந்திட்டது...

(பாடல் - சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் - காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்)

இன்னொரு பாட்டு காதல் சொன்னது...

(பாடல் - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்‍கு...)

பிரிவுத் துயரத்தை பேசியது இந்தப் பாடல்...

(பாடல் - நினைக்‍கத் தெரிந்த மனமே...)

பிரிந்தவர் இணைகையில், பீறிட்டு எழும் அழுகையின் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது இந்தப் பாட்டு...

(பாடல் - காதல் சிறகை காற்றினில் விரித்து..)

மனதையும், உடலையும் வாஞ்சையுடன் வருடும் தென்றலை, மயிலிறகால் வருடி தலைகோதியது இந்த வரிகள்...

(பாடல் - மலர்ந்து மலராத பாதி மலர்போல....)

குறையோடு பிறந்ததால் அநாதையாக்‍கப்பட்டவன், ஆண்டவனைநோக்‍கி அரைகூவல் விடுத்ததை விளம்பியது ஒரு பாட்டு...

(பாடல் - கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...)

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் கண்ணதாசனின் கற்பனையில் வற்றாத நதியாய் ஊற்றெடுத்து கிளம்பின. அவரது பாடல் இடம்பெற்றதாலேயே தமிழின் பல வரிகளுக்‍கு தனி கவுரவம் கிடைத்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி அரசியலுக்‍கு, தன் பாட்டு அரசியலில் அடிக்‍கல் நாட்டியவர் கண்ணதாசன்.

(பாடல்கள்- உலகம் பிறந்தது எனக்‍காக + அச்சம் என்பது மடமையடா + நாடு அதை நாடு + அதோ அந்த பறவைப் போல வாழ வேண்டும் + ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே)

சிட்டுக்‍குருவியை போல விட்டு விடுதலையாக வேண்டும் என்ற பாரதியின் சுதந்திர காற்றை பாட்டு வானில் சஞ்சரிக்‍கவிட்ட கண்ணதாசன். பெண்மையின் உயர்வையும், தன்பாட்டில் உயர்த்திப்பிடித்தான்.

(சிட்டுக்‍குருவிக்‍கு என்ன கட்டுப்பாடு + எல்லாம் நீதானம்மா செல்வம் நீதானம்மா)

கண்ணதாசனின் காதல் பாடல்களின் பல்லவிகள், இளைஞர்கள் தங்கள் காதலிக்‍கு எழுதும் காதல் கடிதங்களுக்‍கு தலைப்புகளாக மாறின.

(பாடல்- உன்னை ஒன்று கேட்பேன் + உன்னைக்‍ காணாத கண்ணும் கண்ணல்ல + நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ? + பார்த்த ஞாபம் இல்லையோ + நெஞ்சம் மறப்பதில்லை + சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்)

கம்பனை, வள்ளுவனை, இளங்கோவடிகளை உருக்‍கி, உவமை பொருத்தி நகை செய்து, அதை பாமரனுக்‍கு அணிவித்த பொற்கொல்லர் கண்ணதாசன். இலக்‍கியங்களின் சாறெடுத்து, கல்வி பயிலாத எளியவர்களுக்‍கும், கவிதை கற்றுத்தந்த கவிதை ஆசான் கண்ணதாசன். எத்தனை எத்தனை நிலா, எத்தனை எத்தனை காய், எத்தனை எத்தனை தேன், எத்தனை எத்தனை ஊர் கண்டவன் கண்ணதாசன்.

(பாடல்கள்- அன்று வந்ததும் இதே நிலா + வான் நிலா நிலா அல்ல + அத்திக்‍காய் காய் + பார்த்தேன் சிரித்தேன் + எந்த ஊர் என்றவனே)

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்ற சோஷலிசம் பெற்றெடுத்த தலைச்சன் பிள்ளையை பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்த்தவன் கண்ணதாசன்.

(பாடல் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்)

தற்கொலை எண்ணத்துடன் தூக்‍குக்‍ கயிறை மாட்டிக்‍கொண்டவனுக்‍கோ அல்லது விஷபாட்டிலை திறந்தவனுக்‍கோ தூரத்தில் இருந்து ஒலிக்‍கும் கண்ணதாசனின் இந்த பாடல், அவனது தற்கொலை எண்ணத்தையே கொலை செய்துவிடும், வாழ்க்‍கைப் பாதையில் மீண்டும் அவனை தடம்பதிக்‍க வைத்துவிடும்.

(பாடல் - வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை...)

வாழ்க்‍கையின் நிலையாமையைக்‍ கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் இப்படி பாட முடியும்?

(போனால் போகட்டும் பாடல் + வீடுவரை உறவு + நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் + தெய்வம் தந்த வீடு )

கண்ணதாசனின் படைப்புகளில் "அர்த்தமுள்ள இந்து மதம்" 4 வேதங்களைத் தாண்டி 5-வது வேதமானது. இயேசு காவியமோ 2-வது பைபிள் ஆனது. வனவாசமோ, கண்ணதாசனின் நிர்வாணத்தை அழகு தமிழ் ஆடைக்‍கட்டிவிட்டு மறைத்தது. சேரமான் காதலி, சாகித்ய அகாடமி விருது பெற்று தந்தது. கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மேடை பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை, கண்ணதாசனிடம் கம்பீரமாக குடியிருந்தது.

கண்ணதாசனின் புகழை வருங்காலம் அறிந்துகொள்ளும் வகையில், அந்தப் பாட்டு பறவைக்‍கு சென்னையில் சிலை​எழுப்பி கவுரவித்தார் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

(Breath)

அரசியல் களத்தில் கண்ணதாசன் பொம்மையைப்போல உருட்டி விளையாடப்பட்டாலும், ஒரு கவிஞனுக்‍குள்ள நேர்மையால் அந்த பொம்மலாட்டத்தை சவாலோடு அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்ணதாசனின் கவிதையில் வெண்பா, வெற்றிபா ஆனது. அறுசீர் விருத்தமோ, அழகியலை ஆடையாய் அணிந்துகொண்டது. செப்பு மொழிகளோ வாழ்க்‍கையின் தத்துவத்தை எதார்த்தமாக சித்தரித்தது.

தமிழர்களின் உணர்வுகளில் பாடலாக, கவிதையாக கலந்துவிட்ட கண்ணதாசன், உடல்நலக்‍ குறைவு காரணமாக 1981-ம் ஆண்டு அக்‍டோபர் மாதம் 17-ம்  தேதி அமெரிக்‍காவின் சிகாகோ நகரில் தனது கடைசி சுவாசத்தை நிறுத்திக்‍கொண்டார். மரணம் மகாபுருஷர்களை என்ன செய்துவிட முடியும்?. மக்‍கள் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்‍கும் மகோன்னத மனிதர்களிடம்தான், மரணம் கூட தோற்றுவிடுகிறது. ஆம் கண்ணதாசனிடமும் மரணம் தோற்றுவிட்டது. காரணம், கவிஞனில் கண்ணதாசன் ஒரு காலக்‍கணிதம். மரணத்தையும் தோற்கடித்த மகா கவிஞன்.

(நான் நிரந்தரமானவன்... அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்‍கு மரணமில்லை)

(ஜெயா ப்ளஸ் செய்திகளுக்‍காக லாரன்ஸ் விஜயன்)



http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-5273.html

https://youtu.be/ED-2p2Wdr0w

No comments:

Post a Comment