Friday, 16 September 2016

தேன்கிண்ணம் 1




1. இருட்டாய் இருக்கிற இதயத்தில் ஏற்றப்படும் முதல் மெழுகுவர்த்தி பாலையாய் இருக்கிற மனசுக்குள் விழும் முதல் பருவ ம‌ழைத்துளி. மெழுகுவர்த்தி தியாகத்தின் சின்னம் மழைத்துளியும் தன்னையே முழுமையாக தந்து பூமியை காக்கிறது. மெழுகுவர்த்தியும், மழைத்துளியும் சுயநலமே இல்லாத தியாகத்தின் சின்னம் என்றால், காதலும் அப்படித்தான் தன்னையே கொடுப்பது. காதலில் விழுவதால் மனிதம் எழுந்து நிற்கிறது. ஒருவருக்‍காக ஒருவர் வாழ்வது, ஒருவருக்‍காக ஒருவர் அழுவது, ஒருவருக்‍காக மற்றவர் சிந்திப்பது, ஒருவர் மற்றவருக்‍கு பசித்திருப்பது இதெல்லாம் காதலின் தியாக அடையாளங்கள்.

(நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடல் - படம் பாலும், பாழமும்)

2. காதலைப் பெறுவது இன்பம். காதலில் தருவது இன்பம். காதலாய் கரைவது இன்பம். மனிதனின் உடலும், உள்ளமும் உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு கோவில். அங்கு அழகிய சிலையாய், ஆராதனைக்‍குரியதாக இருப்பது காதல். காதல் என்னதான் இதயங்கள் ஸ்பரிசிக்‍கிற ஒரு உணர்வாக இருந்தாலும், விரல் தொடுகையில் வீணையின் ஒலியாய் இன்பம் விளைவிக்‍கிறது. உள்ளம் பறித்தது நான் என்பதும், என்றன் உயிர் பறித்தது நீ என்றும், கிள்ளி உறிஞ்சிடும் மாமலர் தேன் என்கிற புரட்சிக்‍ கவிஞனின் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்‍கு கட்டியம் கூறுகிறது இந்தப்பாட்டு, உணர்வுகளின் ஊர்வலமாய் தொடங்குகிறது...
(எங்கிருந்தோ ஆசைகள்... பாடல் - படம் சந்திரோதயம்)

3. கடிதம் எழுதுவதே சுகமான விஷயம். அதிலும் காதல் கடிதம் கேட்கவே வேண்டாம். இதயத்தை அப்படியே தாளில் இறக்கிவைக்கிற முயற்சிதான் காதல் கடிதம். இன்றைய கணினி உலகில் கடிதம் எழுதுவது மறந்துபோய் விட்டது. மறைந்தும் போய்விட்டது. ஒரு காலத்தில் காதலை முன்மொழிவதே கடிதம் தானே. இதயத்தை சிறகுகளால் தூக்கிச் செல்லும் பாசப்பறவைதான் க‌டிதம். 1960-களில் காதல் கடிதம் எழுதத் தொடங்குபவர்களுக்‍கு எல்லாம், இந்தப் பாடல்தான் முன்னுரையாக அமைந்தது...
(அன்புள்ள மான்விழியே... பாடல் - படம் குழந்தையும் தெய்வமும்)

4. கண்கள் காதலின் நுழைவு வாயில். காதல் திருவிழா கண்களின் கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. கல்யாணம் என்பது காதலின் தேர்த்திருவிழா. மானென்றும், மீனென்றும், கணை என்றும் பூ என்றும் கண்களை வர்ணிக்காத கவிஞர்கள் உண்டா? காதலில் கட்டுண்டு கைதியாய் நிற்கையில் கண்கள் தரும் வாக்குமூலம் காதலுக்காக எழுதப்படுகிற தீர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்கள் பேசும்‍போது வாய் ஊமையாகிறது. கண்களும், நெஞ்சமும் ஒருசேர சங்கமிக்‍கிறபோது எழுகிற இந்தப் பாடல், காலம் கடந்தும் கண்களின் உறவை பேசும், காதலின் பெருமை பேசும்...
(கண்கள் எங்கே? நெஞ்சமும் அங்கே பாடம் - படம் கர்ணன்)

5. காதலை இன்னும் அழகாக்குவது பரிசுகள். இந்தப் பரிசுகள்‍ காதலை இன்னும் ஆழமாக்குகிறது. தன்னையே கொடுத்து இன்னொரு இதயத்தை பெறுவதுதான் கா‌தல் என்றாலும், பிறந்தநாள் போன்ற வைபவங்களில் காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் தரும் பரிசுகள் நினைவுச் சின்னங்களாய் நெஞ்சில் பதிந்து விடுகின்றன. காதல் பரிசின் சுபமான முடிவுதான் கல்யாணப்பரிசு. காதலை வலிக்‍காத வார்த்தைகளோடு, வலிமை மிகுந்த காதலை மென்மையாக சொல்கிறது கல்யாணப்பரிசின் இந்தப் பாடல்... காதலின் மேன்மையை விளக்‍கிய கல்யாணப்பரிசு படம் வந்தவுடன்தான், படத்தின் நாயகன், நாயகி பெயரான பாஸ்கர்-வசந்தி பெயர்களை, தங்கள் குழந்தைகளுக்‍கு சூட்டியதாக அப்போது வரலாக பேசப்பட்டது, ஒரு தனிக்‍கதை...
(துள்ளாத மனமும் துள்ளம் சொல்லாத கதைகள் சொல்லும் பாடல் - படம் கல்யாணப்பரிசு)

6. மாமன் மகள், அத்தை மகன், அக்காள் மகள் என சொந்தத்தில் வரும் காதல், சொர்க்கத்தின் காதல். ஆயிரம் பேர் அருகில் இருந்தும் காதலர்கள் தனி உலகில் சஞ்சரிப்பதும், கண்களால் பேசிக் கொள்வதும், சைகைகளால் அன்பை பரிமாறிக் கொள்வதும் எத்தனை அழகு. விடுமுறைக்கு வந்த அத்தை மகள் விடைபெறும் நேரம். ஆசையோ அழைக்கிறது. பிரிவோ அழுத்துகிறது. அத்தை மகனே  போய் வரவா? என்கிறாள் அறை மனதுடன். பிரிந்தே ஆக வேண்டும் என்பதால், அவனுடன் ஒரு காதல் உடன்படிக்கைக்கு வருகிறாள். உங்கள் மனதை கொண்டு செல்லவா? எந்தன் நினைவை தந்து செல்லவா? பாத காணிக்கையில் கவியரசு கண்ணதாசன் வழங்கிய காதல் காணிக்கை இந்தப் பாடல்.
(அத்தை மகனே போய் வரவா? பாடல் - படம் பாத காணிக்கை)

7. இரு மனங்களின் ஸ்பரிசத்தில் உருவாகும் காதல், அந்தஸ்து பார்ப்பதில்லை. ஆனால், சமூகமோ அந்தஸ்து பார்க்காமல் எந்த காதலையும் அனுமதிப்பதில்லை. கணிதத்தில் வர்க்கத்திற்கு கிடைக்கும் விடை, காதலில் நுழையும்போது மட்டும் காதலுக்கு தடைதான் ஏற்படுத்துகிறது. ஏழையாக இருக்கும்போது அரும்பிய காதல், பணம் படைத்தவுடன் கருகத் தொடங்குகிறது. மனதை நினைத்த காதல், பணம் வந்தவுடன் பணத்தையே மணம் முடிக்க ஓடுகிறது. இதனால், காதல் கைகூடாததால், விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட பெண் பாடுகிறாள், அழியாத காதல் நிலையானதென்று அழகான கவி பாடுவாள், வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார்... காதல் மறந்த மனிதனின் மனம், பணம் தேடி ஓடுவதை சவுக்கால் விளாசுகிறது இந்தப் பாடல்... கே.டி.சந்தானத்தின் கற்பனையில் உதித்த இந்தப் பாடல், ஆடிப்பெருக்கில் இருந்து வெளிவரும் ஒரு ஆவேச வெள்ளம்...
(காவேரி ஓடம் கவி சொன்ன காதல்... பாடம் - படம் ஆடிப்பெருக்கு)

8. காதலில் ஊடல் தவிர்க்‍க முடியாது ஒரு இன்பம். ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்கிறான் வள்ளுவன். காதல் உணவென்றால், அதில் கரைகிற உப்புதான் ஊடல். உப்புதான் சமையலின் ருசியை அதிகமாக்‍குகிறது. அதனால், இந்த ஊடல் இல்லையென்றால், காதலும் ருசிக்‍காது. வேறொரு பெண்ணுடன் பேசிக்‍ கொண்டிருப்பதை பொறுத்துக்‍ கொள்ள முடியாத காதலி, தன் காதலிடம் பொய்க்‍கோவம் கொள்கிறாள். காதலன் சமாதானப்படுத்துகிறான். ஊடல், கேள்வி-பதிலாய் சுவைக்‍கிறது இந்தப் பாடலில்...
(கண்ணே கண்டெதெல்லாம் காட்சியா? பாடல் - பாடம் பட்டினத்தில் பூதம்)
தேன்கிண்ணம் (லாரன்ஸ் விஜயன்)

No comments:

Post a Comment