
(வாய்ஸ் ஓவர்)
ஆஷா போஸ்லே... இந்த இசைக் குயிலுக்கு இன்று 82 வயது. மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கரின் உதிரத்தில் சூல் கொண்டு மகாராஷ்டிர மண்ணில் Sangli மாவட்டத்தில் Goar எனும் இடத்தில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8-ம் நாள் பிறந்தார் ஆஷா. "இளமையில் வறுமை கொடிது" என்ற அவ்வையின் வாக்குமூலம், ஆஷாவின் வாழ்க்கை பாதையிலும் மெய்ப்பிக்க தொடங்கியது. ஆஷாவுக்கு 9 வயதாக இருக்கும்போது அவரது தந்தையை மரணம் அழைத்துச் செல்ல, குடும்பம் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டது. பிழைப்பு தேடி ஆஷா போஸ்லேயின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. மூத்த சகோதரியும், இசை தேவதையுமான லதா மங்கேஷ்கருடன் இணைந்து, ஆஷா நாடகங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் குடும்பத்தில் வசதியாக உட்கார்ந்துகொண்ட வறுமையை விரட்ட தொடங்கினார். மராட்டிய மொழியில் 'மாஜா பல்' என்ற படத்திற்காக 1943-ம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய ஆஷா, பல மைல் கல்லை கடந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் முதல் வெற்றிப் படமான தீஸ்ரி மஞ்சில் என்ற படத்தில் ஆஷா பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஆர்.டி. பர்மனோடு தொழில் முறையில் தொடங்கிய ஆஷாவின் இசைப் பயணம், அவருடன் திருமண உறவாகவும் மலர்ந்தது. 1960 - 1970-களில் தனது இசைக்கொடியை வானம் வரை பறக்கவிட்ட ஆஷா போஸ்லே, 1995-ம் ஆண்டு ரசிகர்களை வசப்படுத்திய ரங்கீலா திரைப்படம் வரை பாடல்கள் மூலம் பாலிவுட் திரை உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.
(Breath : யாதோங் கி பாரத் - ரங்கீலா பாடல்கள்)
ஆஷா தமிழில் பாடிய செண்பகமே செண்பககே பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் இசை மணத்தை வீசிக்கொண்டே இருக்கிறது.
(செண்பகமே செண்பகமே பாடல்)
தனது கானக்குரலால் இதுவரை சுமார் 12 ஆயிரம் திரைப்படப் பாடல்களை வழங்கியிருக்கும் ஆஷா போஸ்லே, கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சிலும் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, லட்சோப லட்சம் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் ஆஷா போஸ்லேயின் இசைப் பயணம் காலம் கடந்தும் பேசப்படும்...
ஜெயா ப்ளஸ் செய்திகளுக்காக லாரன்ஸ் விஜயன்...
No comments:
Post a Comment