Friday, 16 September 2016

தமிழ் சினிமாவின் "தாலாட்டுப்" பாடல்கள்


1. தாலாட்டு... தாய்வழியாக குழந்தை முதலில் கற்றுக்‍கொள்ளும் தாய்மொழி. தாயின் தாலாட்டில் உறங்காத குழந்தையும் உண்டோ? ஆனால், தாலாட்டுப்பாட தாயாகத்தான் இருக்‍க வேண்டுமா? தாய் உள்ளம் இருந்தாலே போதுமே! எத்தனைக்‍ குழந்தைகளையும் அரவணைக்‍கலாம். அமைதியின் மடியில் தூங்கவைக்‍கலாம்.

(பாடல் - 16 வயதினிலே 17 பிள்ளையம்மா... : படம் - அன்னமிட்ட கை)

2. எத்தனைப்பேர் இருந்தாலும், குழந்தைக்‍கு அன்னையைப்போல் ஆகுமா? உயிர்க்‍கொடுத்து, உதிரம் தரும் உயிரல்லவா தாய். ஆனால், சில உறவுகள் தாயின் இடத்தையும் நிரப்பத்தான் செய்கின்றன. அதில் அத்தை உறவு குழந்தைக்‍கு இன்னொரு அம்மா உறவாக அமைகிறது இந்தப் படத்தில். இந்த பாடலில் அன்பின் முகவரி தெரியும். அத்தையின் அருமை புரியும்.

(பாடல் - அத்தைமடி மெத்தையடி... ஆடி விளையாடம்மா... : படம் - கற்பகம்)

3. தூங்க வைப்பது தானே தாலாட்டு? ஆனால், இங்கே விழிக்க வைக்கிறது ஒரு தாலாட்டு.. ஆம்.. குழந்தையைத் தூங்க வைக்கிற தாலாட்டுப் பாட்டு, காதலன் உள்ளத்தில் தூங்கிக் கிடந்த பல எண்ணங்களை விழிக்க வைக்கிறது.. காதலனின் உள்ளத்து உணர்வுகளை எழுப்பி உட்கார வைக்கிறது இந்த காதல் பிரிவின் தாலாட்டு...

(பாடல் - கண்ணன் வருவான் கதை சொல்லுவான்...(சோகப்பாட்டு) : படம் - பஞ்சவர்ணக்கிளி)

4. காயம் பட்ட காதலனை ஆறுதல் படுத்தி, தூங்க வைக்கிற ஆறுதல் தாலாட்டு இது.. மனசு முழுவதும் அமைதியை அடைத்து வைக்கிற ஒரு அன்பின் தாலாட்டு.. அமைதியின் தாலாட்டு இந்த பாடல்...

(பாடல்  - தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... : படம் - ஆலயமணி)

5. கணவனின் அன்பை வேறொருத்தியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியநிலை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி, கண்ணீருக்கு தன்னை ஒப்படைக்கிறாள் அன்பான மனைவி.. உயிராய் நினைத்து ஊட்டி வளர்த்த பிள்ளையை விட்டுப்பிரிய பிள்ளையிடமே அனுமதி கேட்கிறாள்... கண்ணீரால் யாசிக்கும் இந்த பாடல், ஒரு தாயின் கதறல் தாலாட்டு...

(பாடல் - அன்னமிட்ட கைகளுக்கு... : படம் - இருமலர்கள்)

6. பெண்களை தெய்வமாக போற்றும் இந்த நாட்டில், பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள்?.. குடும்பம், உறவுகள், சமூகம், பணியிடம் என எல்லா பந்தங்களிலும், இடங்களிலும் பெண்கள் சந்திக்க வேண்டிய சங்கடங்கள் தான் எத்தனை எத்தனை?.. நிராயுதபாணியாக, ஆனால் போராளியாக வாழவேண்டிய பெண்ணுக்கு தூக்கம் எப்படி வரும்?.. பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் அவள் மீது சுமத்தப்படுகிற பொறுப்புக்களும், பணிகளும், அவளைத் தூங்க விடுமா?.. தூக்கத்தில் கனவு வரும்.. ஆனால், பெண்ணாகப் பிறந்தவளுக்கோ, தூக்கமே கனவாகி விடுகிறது.. இந்த பாடல், பெண்ணின் போராட்ட வாழ்க்கையை உண்மையாக்கிவிடுகிறது...

(பாடல் - காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.. : படம் - சித்தி)

7. குழந்தைக்கு மட்டும் தான் தாலாட்டா என்ன?.. காதலிக்கு காதலனும், காதலனுக்கு காதலியும் குழந்தைகள் தானே?... காதல் குழந்தைகள் மடிமீது தலை வைத்து பாடுகிற காதல் தாலாட்டு இது...

(பாடல் - மடி மீது தலை வைத்து... : படம் - அன்னை இல்லம்)

8. பெண் குழந்தைகள், பெரும் செல்வங்கள்... தாய்-தந்தை இருவரும், தாங்கள் பெற்ற பெண்  பிள்ளைகள் இருவரை பேணி வளர்க்கின்றனர்.. குழந்தைகளை ஆரத்தழுவி கொஞ்சி மகிழ்ந்து, பாசம் மிக்க மான் குட்டியே என விளித்து தாய் தந்தை இருவரும் சேர்ந்து பாடுகின்றனர் தாலாட்டு... இந்த பாடல்... பெற்றோர் தாலாட்டு...

(பாடல் - நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே... : படம் - பார் மகளே பார்)

9. பெற்றால்தான் பிள்ளையா?... குழந்தைகள் எல்லோரையும் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து பாசம் பொழிய வேண்டும்.. அன்பு மனங்கள் இதைத்தான் செய்யும்.. யாரோ பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாய் நினைத்து தாலாட்டு பாடுகிறான் இந்த நாயகன்... சுயநலமில்லாத சுத்தமான தாலாட்டு இந்த பாடல்...

(பாடல் - செல்லக்கிளியே மெல்லப்பேசு... : படம் - பெற்றால்தான் பிள்ளையா)

10. தாத்தா - பாட்டி கதை சொல்லி கேட்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள்.. ஆனால், கூட்டுக்குடும்பத்தின் ஒவ்வொரு செங்கலும் சுயநல சுத்தியல்களால் உடைக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், கதை சொல்லிகளான தாத்தா-பாட்டிகள் காணாமல் போய்விடுகிறார்கள்.. தன் தாய், தனக்குப் பாடிய தாலாட்டை, நாயகியைத் தூங்க வைக்க பாடுகிறான் நாயகன்... இது நாயகன் தாலாட்டு...

(பாடல் - இந்த பச்சைக்கிளிக்கொரு... : படம் - நீதிக்குத் தலைவணங்கு)-(ஜேசுதாஸ் பாடியது)

11. தங்கைக்குப் பிறந்த குழந்தையை தன் குழந்தையாக பாவிக்கிறாள் அக்கா... தாய்ப்பாசத்தைப் பொழிந்து குழந்தையை வளர்க்கிறாள்.. பாசமாக வளர்த்த குழந்தையை தங்கை கொண்டு சென்றுவிடுவாளோ என்ற அச்சத்தில் பொத்தி பொத்தி வளர்க்கிறாள் சகோதரி... பாசத்தை சகோதரியிடம் பகிர்ந்துகொள்ள முடியாத அக்காவின் தாலாட்டு தான் இது...

(பாடல் - பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று... : படம் - அன்னை)

12. பிள்ளைகளால் படித்து தெரிந்துகொள்ள முடியாத பிள்ளைத் தமிழை, ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பது போல, அண்ணன், தன் தங்கையை எப்படியெல்லாம் வளர்த்தான்.. தங்கை, அண்ணனை எப்படியெல்லாம் மதித்தாள்... பிறந்த கதை, வளர்ந்த கதை, வாழ்ந்த கதை, பிரிந்த கதை.. இதையெல்லாம் அண்ணன், தன் குழந்தைக்கும், தங்கை, தன் குழந்தைக்கும் சொல்லி உணர்த்துகிற தாலாட்டு இது... பாசத்தின் தாலாட்டு...

(பாடல் - மலர்ந்தும் மலராத பாதி மலர்போல... : படம் - பாசமலர்)

13. அன்பு காட்டி, அரவணைக்கிறவர்கள் இருக்கும் வரை இங்கு யாருமே அநாதைகள் இல்லை.. அநாதை என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே எடுத்துவிடத் துடிக்கிற ஒரு மனிதனின் அன்புத் தாலாட்டு...

(பாடல் - செல்லக் கிளிகளாம் பள்ளியிலே... - படம் - எங்க மாமா)


14. திக்‍கற்றவர்களுக்‍கு தெய்வம் துணை என்பார்கள். சூழ்நிலைகளின் சூறாவளியால் தூக்‍கி வீசப்பட்ட அபலைப் பெண்ணிற்கு ஆதரவு தருகிறான் நல்ல உள்ளம் படைத்த ஒருவன்... அவளை தங்கையாக பாவிக்‍கும் அவன், அவளுக்‍கு பிறந்த குழந்தையை கண்ணும் கருத்துமாய் வளர்க்‍கிறான். குழந்தைக்‍கு தந்தை பொறுப்பை ஏற்கிறான். மகன் போன்றவனுக்‍கு தந்தையாய் மாறிய நல்ல உள்ளம் பாடும் தந்தை தாலாட்டு இது...

(பாடல் - பிள்ளைக்‍குத் தந்தை ஒருவன்.... - படம் - பார்த்தால் பசிதீரும்)

15. குழந்தைக்‍கு தாய் பாடுவது தாலாட்டு. ஆனால், தாய் தந்தையரை தூங்க வைப்பதற்காக குழந்தை பாடும் இந்த தாலாட்டு... இது குழந்தை தாலாட்டு...

(பாடல் - பச்சை மரம் ஒன்று.... படம் - ராமு)

16. கூட்டுக்‍ குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய தன் குழந்தையையே புகுந்த வீட்டுக்‍கு காணிக்‍கையாய் தருகிறாள் நாயகி, நாயகனிடம் அறிவிக்‍காமல். கொந்தளிக்‍கிறான் நாயகன். தன் பாச அரும்பை பிரிந்த தவிப்பில் பாடுகிறான் நாயகன். பாட்டு வழியிலேயே தன் பக்‍க நியாயத்தை உணர்த்துகிறாள் நாயகி. குழந்தையில்லா வெறும் தொட்டிலை ஆட்டி பாடும் வித்தியாசமான தாலாட்டு இது...

(பாடல் - மாணிக்‍கத் தொட்டில் இங்கிருக்‍க... படம் - பணம் படைத்தவன்)
-லாரன்ஸ் விஜயன்

தமிழ் சினிமாவின் "கனவு" பாடல்கள்




1.   உறக்‍கத்தில் வருவது ஒரு கனவு. மனக்‍கிறக்‍கத்தில் வருவது ஒரு கனவு. இந்த கனவு இனிக்‍கும். காதல் கனவை விதைக்‍கும். காதல் வயப்படும் மனசுக்‍கெல்லாம், இந்த கனவு வசப்படும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த "கண்ணன் என் காதலன்" படப்பாடல், கனவுப்பாடல் மட்டுமல்ல காதலிக்‍கும் இதயங்களை உரமேற்றும் உணவுப்பாடல்.

(பாடல் - சிரித்தாள் தங்கப் பதுமை.... படம் : கண்ணன் என் காதலன்)

2. தன் திறமை மேல் அபார நம்பிக்‍கை வைத்துள்ள இளைஞன் ஒருவன், தன் திறமையை பணமாக்‍க முயல்கிறான். இந்த உலகம் திறமையை உடனே அங்கீகரித்துவிடுமா என்ன?. ஒவ்வொரு இடத்திலும் அவனை நிராகரிக்‍கிறது இந்த சமூகம். விரக்‍தி கலந்த வேதனையோடு, மரத்தடியில் அமர்கிறான். களைப்பில் கண் மூடும் அவனை, கைத்தட்டி எழுப்புகிறாள், பொன்மகள்... பொருள் கோடி தர... சொர்கம் திரைப்படத்திலிருந்து சொக்‍கவைக்‍கும் ஒரு பாடல்.

(பாடல் - பொன்மகள் வந்தாள்.... படம் : சொர்கம்)

3. தமிழ் திரைப்படங்களில் கேள்வி-பதில் பாணியில் வந்த பலப்பாடல்கள் வெற்றிப்பாடல்களாய் அமைந்துள்ளன. ஆழமான கேள்விகளும், அதற்கு அறிவு பூர்வமான பதில்களும் அமைந்துள்ள எத்தனையோ பாடல்கள் பிரபலம். ஆனால் கேள்வியும், இதுதான் பதிலென்று உறுதியாக சொல்ல முடியாத நம்மை சிந்திக்‍கவைக்‍கிற இந்த பாடல், கவியரசு கண்ணதாசனின் உச்சக்‍கட்ட கற்பனை வளம். கேள்விகளால் புனையப்பட்ட கவிதை வேள்வி இந்தப் பாடல்.

(பாடல் - கொடியசைந்ததும் காற்று வந்ததா... படம் : பார்த்தால் பசிதீரும்)

4. அந்தஸ்து பார்த்து வருவதா காதல்? உள்ளங்களில் உறவு பிணைப்பில் எழுகிற காதல் தீ, சுயநலத்தை சுட்டெரிக்‍கிறது. பட்டம் பயின்ற ஒருவன் எந்த தொழிலும் இழிவல்ல என சொந்த காலில் தன் உழைப்பால் வாழ்கிறான். அவனின் நேர்மையான நெஞ்சம், ஏழைகள்பால் இரங்கும் குனம், நாயகியை நாயகன் பக்‍கம் இழுக்‍கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாரத் ரத்னா பெற்றுத் தந்த ரிக்‍ஷாகாரன் படத்தில் இடம்பெறும் இந்த கனவுப் பாடல், அழகிய தமிழால் நெய்த ஆடை, இரு விழிகளில் ஓடும் காதல் ஓடை.

(பாடல் - அழகிய தமிழ் மகள் இவள்.... படம் : ரிக்‍ஷாகாரன்)

5. ஏழை-பணக்‍காரன் என்கிற வர்க்‍கபேதம், காதலில் விழுந்துவிட்ட ஒரு கரும்புள்ளி, பணம் சம்பாதித்துட்டு வா, தங்கையை மணம் முடிக்‍கலாம் என்கிறான் அண்ணன். நாயகனோ பட்டிணப்பிரவேசத்தில் பணம் சம்பாதித்து, சமூகத்தில் பெரிய அந்துஸ்துடன் காதலியை கைப்பிடிக்‍க ஊர் திரும்புகிறான். ரயிலில் வரும் அவனை, கனவு தேவதையாய் வந்து வரவேற்கிறார் நாயகி. ரயிலின் பின்னணியில் ரசனையுடன் வலம்வரும் இந்த பாடல், சித்திரை மாதத்தின் பெளர்ணமி நேரம் போல ஒளிரும். சிலுசிலுவென வீசும் தென்றலைப் போல இதமாகக்‍ குளிரும்.

(பாடல் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்... படம் : ராமன் எத்தனை ராமனடி)

6. I have a Dream... எனக்‍கு ஒரு கனவு இருக்‍கிறது, என்றான் அமெரிக்‍காவில் கருப்பினத்தவரின் கண்ணியம் காத்த புரட்சியாளர் மார்டின் லூதர் கிங். ஒடுக்‍கப்பட்ட மக்‍களின் உரிமைக்‍ குரலாய் எழுந்தவனின் பிரகடனம் தான் I have a Dream. எல்லோருக்‍கும் ஒரு கனவு உண்டு. லட்சங்களை அடைய வேண்டும் என்பது பலரின் கனவு, லட்சியங்களை அடையவேண்டும் என்பது ஒரு சில புரட்சியாளர்களின் கனவு. எட்டயபுரத்து எரிமலை மகாகவி பாரதியும் கனவு கண்டான். அது, நாட்டின் மீது அவன் கொண்ட கரிசனம், அவன் பாடலோ ஒரு தீர்க்‍கதரிசனம்.

(பாடல் - சிந்துநதியின் இசை... படம் : கை கொடுத்த தெய்வம்)

7.  சிரிப்பில் சிந்தனை கலந்த நகைச்சுவை மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சிரிப்பலை மூலம் சிந்தனை ஈரத்தை மக்‍கள் மனங்களில் பதியவைத்த கலைவாணரின் இந்தப் பாடல், பல ஆண்டுகளுக்‍கு முன்பே, வருங்காலத்தை படம் பிடித்துக்‍ காட்டிய காலத்தின் கண்ணாடி. விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடி.

(பாடல் - விஞ்ஞானத்தை வளர்க்‍க போரேன்டி... படம் : நல்லதம்பி)

8.  "அழகாய் நின்றாடும் மானே" உன் மொழியே சங்கீதம் தானே... கவிஞர். கு.மா.பாலசுப்பரமணியத்தின் இந்த காதல் வர்ணனை கருப்பு வெள்ளை காலத்தின் கம்பீரமான கனவுப் பாடல். கனவின் மாயா உலகத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் ரசனைகளின் கூடல்.

(பாடல் - கனவின் மாயா லோகத்திலே... படம் : அன்னையின் ஆணை)

9.  இளநீரை சுமந்திருக்‍கும் தென்னை மரமல்ல!
    மழை மேகம் குடியிருக்‍கும் குளிர் நிலவும் அல்ல!
    இங்கும் அங்கும் நீர்பாயும் நீரோடை அல்ல!
    இதற்கு மேலும் இலக்‍கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?

    வாலியின் வளமான கற்பனையை என்ன சொல்ல? கலை உணர்வை, கற்பனை உளியால் செதுக்‍கியது இந்தப் பாடல்.

(பாடல் - அழகு தெய்வம் மெல்ல மெல்ல.... படம் : பேசும் தெய்வம்)

10. ஏழை-எளிய மனிதர்களின் காதல் கனவு எளிமையாய்தான் இருக்‍க வேண்டுமா என்ன? இன்றைய தலைமுறை மறந்துவிட்ட அன்றைய டூரிங் டாக்‍கிஸில் படம் பார்க்‍கும் நாயகன், நாயகி, படத்தின் நாயகன், நாயகியாய் மாறுகிறார்கள் கனவில். தேறுகிறார்கள் காதல் தேர்வில்... அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ? உங்கள் கவிதைக்‍கு என் மேனி விளையாட்டோ? கண்ணதாசனின் பாட்டு வானில் மிதக்‍கும் இந்த நீலநிறம், கவிதை வானில் வானவில்லின் வர்ணஜாலம்...

(பாடல் - நீலநிறம் வானுக்‍கும் கடலுக்‍கும் நீலநிறம்... படம் : என் அண்ணன்)

11. இலக்‍கியங்கள் மீது கொண்ட பற்றால் எழும் ஒரு இன்ப கனவுதான் இந்த பாடல். காளிதாசனின் சகுந்தலையை கண்முன் கொண்டு நிறுத்தும் தத்ரூபமான இந்தக்‍ காட்சி, புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் பேராற்றல் கொண்ட நடிப்பால் பெருமையடைகிறது. காளிதாசன் காவியம், சகுந்தலையின் ஓவியம்.

(பாடல் - காளிதாச மகாகவி காவியம்... படம் : எங்கிருந்தோ வந்தாள்)

12.  அனாதைகளாகிப்போன அண்ணன்-தங்கை இருவர். தனக்‍கான வாழ்க்‍கையை தவிர்த்துவிட்டு, தங்கைக்‍காகவே வாழ்கிறான் அண்ணன். தாயாக, தந்தையாக மாறி, தங்கையை வளர்க்‍கிறான், தங்கையின் எதிர்காலம் எப்படியெல்லாம் அமையவேண்டும் என கனவு காண்கிறான்.
அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்றுவரை முதல் எடுத்துக்‍காட்டாய் முன்மொழியப்படும் பாசமலரின், மலர் பாடல் இது.

(பாடல் - மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்... படம் : பாசமலர்)

13. திருமணங்கள் சொர்க்‍கத்தில் நிச்சயிக்‍கப்படுகிறது. நிச்சயிக்‍கப்பட்ட திருமணங்களை சொர்க்‍கமாக அமைத்துக்‍ கொள்வது அவரவர் பொறுப்பு. சொர்க்‍கத்தில் நிச்சயிக்‍கப்பட்ட திருமணம் ஒன்று, பாடல் வடிவில் பவனி வருகிறது.

(பாடல் - வானமெனும் வீதியிலே... படம் : அன்னை வேளாங்கண்ணி)

14. இறந்துபோன மனைவியை மறந்துபோகாது அவளது நினைவுகளுடன் குடும்பம் நடத்துகிறான் கணவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருத்தியை கைப்பிடிக்‍க நேர்ந்தாலும், அவளோடு வாழ்க்‍கையை பகிர்ந்துகொள்ள முடியாமல் வதைபடுகிறான். கனவில் வரும் மனைவியோ கணவனைத் தேற்றுகிறாள். கைப்பிடித்தவளை கண்கலங்கவிடாமல் காப்பாற்றச் சொல்கிறாள். சோகத்தின் அருமையையும், சொந்தத்தின் பெருமையையும் பேசும், கற்பகம் படத்தின் இந்தக்‍ கனவுப் பாடல், காலம் கடந்து பேசும்...

(பாடல் - மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா... : கற்பகம்)

15. காதலனின் மனதில் குடியிருப்பது நானா? அல்லது வேறொருத்தியா? என மனம் வெதும்புகிறாள் காதலி. குழம்பிய மனதோடு வரும் இந்த கனவுப்பாடல் தெளிவான தமிழில் வருகிறது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் உன்னைப்போல் ஒரு பெண் கிடைப்பாளா? குழம்பிய பெண் மனதிற்கு உறுதியான பதில் தருகிறான் நாயகன், இந்த பாடல் வடிவில்...

(பாடல் - நித்தம்நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம்... : நூற்றுக்‍கு நூறு)

16. ஏழைகளின் வயிற்றில் அடித்து, பிழைப்பு நடத்தும் கொடியவன் ஒருவன் தீய எண்ணங்களுடன் போதையில் காணும் கனவு இது. இனிய இசையுடன் பயணிக்‍கு இந்த பாடலில் அழகுதான் ராகம்... ஆசைதான் தாளம்...

(பாடல் - அழகு ஒரு ராகம்... : படகோட்டி)

17. பாடல் ஒன்றின் மூலம் ஒரு திருமணத்தை நடத்திக்‍காட்ட முடியுமா? பத்திரி‍கை அடித்து, ஊரைக்‍ கூட்டி, பெண்ணழைப்பு நடத்தி மணமகன் கையில் மணப்பெண்ணை ஒப்படைக்‍கும் இந்த கல்யாண பாட்டு, ஒரு வித்தியாசமான கனவுப் பாட்டு...

(பாடல் - பூமுடித்தாள் இந்த பூங்குழலி... : நெஞ்சிருக்‍கும் வரை)

18. எத்தனை ஜென்மம் கடந்தாலும் நாம் இருவரும்தான் கணவன்- மனைவி. அதில் எந்த மாற்றமும் இல்லை என, காலங்கள் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்‍கிற ஜோடிகளின் கனவுப் பாடல்...

(பாடல் - அழகுக்‍கும், மலருக்‍கும் ஜாதியில்லை... : நெஞ்சம் மறப்பதில்லை)

19. பெண்ணை வர்ணிக்‍காத கவிஞர்களே இல்லை. கலா ரசனையுடன் கொஞ்சும் தமிழில் எத்தனை எத்தனை வர்ணனைகள் இருந்தாலும், பெண்ணை புனிதமாக எண்ணி பூஜிக்‍கிற இந்தப் பாடல்... பெண்மைக்‍கு தரும் உச்சகட்ட மதிப்பு, மாண்பு...

(பாடல் - பூஜைக்‍கு வந்த மலரே வா... : பாத காணிக்‍கை)

20. சாதாரண சிப்பியில் இருந்து முத்து பிறப்பதைப்போல, சாதாரண கல்லில் இருந்து சிற்பம் கிடைப்பதைப் போல இந்த பாடல். கற்பனைகளின் உச்சகட்ட காவியம்... கலையாக களையான ஓவியம்...

(பாடல் - வெண்ணிலா வானில்... : மன்னிப்பு)
லாரன்ஸ் விஜயன்

தேன்கிண்ணம் 1




1. இருட்டாய் இருக்கிற இதயத்தில் ஏற்றப்படும் முதல் மெழுகுவர்த்தி பாலையாய் இருக்கிற மனசுக்குள் விழும் முதல் பருவ ம‌ழைத்துளி. மெழுகுவர்த்தி தியாகத்தின் சின்னம் மழைத்துளியும் தன்னையே முழுமையாக தந்து பூமியை காக்கிறது. மெழுகுவர்த்தியும், மழைத்துளியும் சுயநலமே இல்லாத தியாகத்தின் சின்னம் என்றால், காதலும் அப்படித்தான் தன்னையே கொடுப்பது. காதலில் விழுவதால் மனிதம் எழுந்து நிற்கிறது. ஒருவருக்‍காக ஒருவர் வாழ்வது, ஒருவருக்‍காக ஒருவர் அழுவது, ஒருவருக்‍காக மற்றவர் சிந்திப்பது, ஒருவர் மற்றவருக்‍கு பசித்திருப்பது இதெல்லாம் காதலின் தியாக அடையாளங்கள்.

(நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடல் - படம் பாலும், பாழமும்)

2. காதலைப் பெறுவது இன்பம். காதலில் தருவது இன்பம். காதலாய் கரைவது இன்பம். மனிதனின் உடலும், உள்ளமும் உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு கோவில். அங்கு அழகிய சிலையாய், ஆராதனைக்‍குரியதாக இருப்பது காதல். காதல் என்னதான் இதயங்கள் ஸ்பரிசிக்‍கிற ஒரு உணர்வாக இருந்தாலும், விரல் தொடுகையில் வீணையின் ஒலியாய் இன்பம் விளைவிக்‍கிறது. உள்ளம் பறித்தது நான் என்பதும், என்றன் உயிர் பறித்தது நீ என்றும், கிள்ளி உறிஞ்சிடும் மாமலர் தேன் என்கிற புரட்சிக்‍ கவிஞனின் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்‍கு கட்டியம் கூறுகிறது இந்தப்பாட்டு, உணர்வுகளின் ஊர்வலமாய் தொடங்குகிறது...
(எங்கிருந்தோ ஆசைகள்... பாடல் - படம் சந்திரோதயம்)

3. கடிதம் எழுதுவதே சுகமான விஷயம். அதிலும் காதல் கடிதம் கேட்கவே வேண்டாம். இதயத்தை அப்படியே தாளில் இறக்கிவைக்கிற முயற்சிதான் காதல் கடிதம். இன்றைய கணினி உலகில் கடிதம் எழுதுவது மறந்துபோய் விட்டது. மறைந்தும் போய்விட்டது. ஒரு காலத்தில் காதலை முன்மொழிவதே கடிதம் தானே. இதயத்தை சிறகுகளால் தூக்கிச் செல்லும் பாசப்பறவைதான் க‌டிதம். 1960-களில் காதல் கடிதம் எழுதத் தொடங்குபவர்களுக்‍கு எல்லாம், இந்தப் பாடல்தான் முன்னுரையாக அமைந்தது...
(அன்புள்ள மான்விழியே... பாடல் - படம் குழந்தையும் தெய்வமும்)

4. கண்கள் காதலின் நுழைவு வாயில். காதல் திருவிழா கண்களின் கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. கல்யாணம் என்பது காதலின் தேர்த்திருவிழா. மானென்றும், மீனென்றும், கணை என்றும் பூ என்றும் கண்களை வர்ணிக்காத கவிஞர்கள் உண்டா? காதலில் கட்டுண்டு கைதியாய் நிற்கையில் கண்கள் தரும் வாக்குமூலம் காதலுக்காக எழுதப்படுகிற தீர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்கள் பேசும்‍போது வாய் ஊமையாகிறது. கண்களும், நெஞ்சமும் ஒருசேர சங்கமிக்‍கிறபோது எழுகிற இந்தப் பாடல், காலம் கடந்தும் கண்களின் உறவை பேசும், காதலின் பெருமை பேசும்...
(கண்கள் எங்கே? நெஞ்சமும் அங்கே பாடம் - படம் கர்ணன்)

5. காதலை இன்னும் அழகாக்குவது பரிசுகள். இந்தப் பரிசுகள்‍ காதலை இன்னும் ஆழமாக்குகிறது. தன்னையே கொடுத்து இன்னொரு இதயத்தை பெறுவதுதான் கா‌தல் என்றாலும், பிறந்தநாள் போன்ற வைபவங்களில் காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் தரும் பரிசுகள் நினைவுச் சின்னங்களாய் நெஞ்சில் பதிந்து விடுகின்றன. காதல் பரிசின் சுபமான முடிவுதான் கல்யாணப்பரிசு. காதலை வலிக்‍காத வார்த்தைகளோடு, வலிமை மிகுந்த காதலை மென்மையாக சொல்கிறது கல்யாணப்பரிசின் இந்தப் பாடல்... காதலின் மேன்மையை விளக்‍கிய கல்யாணப்பரிசு படம் வந்தவுடன்தான், படத்தின் நாயகன், நாயகி பெயரான பாஸ்கர்-வசந்தி பெயர்களை, தங்கள் குழந்தைகளுக்‍கு சூட்டியதாக அப்போது வரலாக பேசப்பட்டது, ஒரு தனிக்‍கதை...
(துள்ளாத மனமும் துள்ளம் சொல்லாத கதைகள் சொல்லும் பாடல் - படம் கல்யாணப்பரிசு)

6. மாமன் மகள், அத்தை மகன், அக்காள் மகள் என சொந்தத்தில் வரும் காதல், சொர்க்கத்தின் காதல். ஆயிரம் பேர் அருகில் இருந்தும் காதலர்கள் தனி உலகில் சஞ்சரிப்பதும், கண்களால் பேசிக் கொள்வதும், சைகைகளால் அன்பை பரிமாறிக் கொள்வதும் எத்தனை அழகு. விடுமுறைக்கு வந்த அத்தை மகள் விடைபெறும் நேரம். ஆசையோ அழைக்கிறது. பிரிவோ அழுத்துகிறது. அத்தை மகனே  போய் வரவா? என்கிறாள் அறை மனதுடன். பிரிந்தே ஆக வேண்டும் என்பதால், அவனுடன் ஒரு காதல் உடன்படிக்கைக்கு வருகிறாள். உங்கள் மனதை கொண்டு செல்லவா? எந்தன் நினைவை தந்து செல்லவா? பாத காணிக்கையில் கவியரசு கண்ணதாசன் வழங்கிய காதல் காணிக்கை இந்தப் பாடல்.
(அத்தை மகனே போய் வரவா? பாடல் - படம் பாத காணிக்கை)

7. இரு மனங்களின் ஸ்பரிசத்தில் உருவாகும் காதல், அந்தஸ்து பார்ப்பதில்லை. ஆனால், சமூகமோ அந்தஸ்து பார்க்காமல் எந்த காதலையும் அனுமதிப்பதில்லை. கணிதத்தில் வர்க்கத்திற்கு கிடைக்கும் விடை, காதலில் நுழையும்போது மட்டும் காதலுக்கு தடைதான் ஏற்படுத்துகிறது. ஏழையாக இருக்கும்போது அரும்பிய காதல், பணம் படைத்தவுடன் கருகத் தொடங்குகிறது. மனதை நினைத்த காதல், பணம் வந்தவுடன் பணத்தையே மணம் முடிக்க ஓடுகிறது. இதனால், காதல் கைகூடாததால், விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட பெண் பாடுகிறாள், அழியாத காதல் நிலையானதென்று அழகான கவி பாடுவாள், வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார்... காதல் மறந்த மனிதனின் மனம், பணம் தேடி ஓடுவதை சவுக்கால் விளாசுகிறது இந்தப் பாடல்... கே.டி.சந்தானத்தின் கற்பனையில் உதித்த இந்தப் பாடல், ஆடிப்பெருக்கில் இருந்து வெளிவரும் ஒரு ஆவேச வெள்ளம்...
(காவேரி ஓடம் கவி சொன்ன காதல்... பாடம் - படம் ஆடிப்பெருக்கு)

8. காதலில் ஊடல் தவிர்க்‍க முடியாது ஒரு இன்பம். ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்கிறான் வள்ளுவன். காதல் உணவென்றால், அதில் கரைகிற உப்புதான் ஊடல். உப்புதான் சமையலின் ருசியை அதிகமாக்‍குகிறது. அதனால், இந்த ஊடல் இல்லையென்றால், காதலும் ருசிக்‍காது. வேறொரு பெண்ணுடன் பேசிக்‍ கொண்டிருப்பதை பொறுத்துக்‍ கொள்ள முடியாத காதலி, தன் காதலிடம் பொய்க்‍கோவம் கொள்கிறாள். காதலன் சமாதானப்படுத்துகிறான். ஊடல், கேள்வி-பதிலாய் சுவைக்‍கிறது இந்தப் பாடலில்...
(கண்ணே கண்டெதெல்லாம் காட்சியா? பாடல் - பாடம் பட்டினத்தில் பூதம்)
தேன்கிண்ணம் (லாரன்ஸ் விஜயன்)

கானக்‍குயில் சுசீலா

பிரபல பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திரையிசை உலகில் கானக்‍குயிலாக திகழ்ந்து வரும் சுசீலாவின் இந்த சாதனை, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சிட்டுக்‍குருவிக்‍கு என்ன கட்டுப்பாடு?  படம் - சவாலே சமாளி)

பி.சுசீலா... புலப்பாக்‍க சுசீலா என்ற நீண்ட பெயரின் சுருக்‍கமான வடிவம்... இந்தக்‍ கானக்‍குயிலின் குரல் கேட்டுதான், தமிழிசை ரசிகர்களுக்‍கு பொழுதுகள் விடிந்தன... 1935-ம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் விஜயநகரத்தில் பிறந்த இந்த இசைக்‍குயிலின் முதல் அழுகை சத்தம்கூட நிச்சயம் ஏதாவது ஒரு சுரத்தில்தான் சங்கமித்திருக்‍கும்.

மற்ற பாடகிகளுக்‍கெல்லாம், தொண்டையில் இருந்து பாடல் 'வர'ப்பெற்றது... ஆனால் சுசீலா பாடும்போது மட்டும் பாடல்கள் 'வரம்' பெற்றன. ஆந்திராவில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையான இசைப் பயிற்சி பெற்ற சுசீலா, சென்னை வானொலியில் 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் தனது பாட்டுப் பரிவர்த்தனையை அரங்கேற்றம் செய்தார். அரங்கேற்றமே அற்புதமாய் அமைய, சுசீலாவின் இசைத்திறமை, அவரை திரையுலகை நோக்‍கி முன்னேற்ற நடை போட வைத்தது. தெலுங்கு படத்தில் தனது திரையிசைக்‍கு அகரம் எழுதிய சுசீலா, பின்னாளில் தமிழ்ப் படங்களின் தவிர்க்‍க முடியாத பின்னணிப் பாடகியாக மாறினார். பின்னணிப் பாடகிகளின் வரிசையில் முன்னணியில் இருந்தார் பி.சுசீலா. 1955-ம் ஆண்டு வெளிவந்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?' 'உன்னைக்‍ கண்தேடுதே' பாடல்கள் சுசீலாவின் திறமை மீது திரையுலகம் கொண்டிருந்த கேள்விக்‍ குறிகளை ஆச்சரியக்‍குறிகளாக மாற்றின.

(பாடல்கள் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?' 'உன்னைக்‍ கண்தேடுதே') (ஏதேனும் ஒரு பாடல்) (படம் கணவனே கண்கண்ட தெய்வம்)

தெலுங்குதான் தாய்மொழி... இருப்பினும், அவர் நாக்‍கில் குளித்து வந்த தமிழ்ப்பாடல்கள், கம்பனின் தமிழுக்‍கும், திரையுலகக்‍ கம்பனாக விளங்கிய கண்ணதாசனின் தமிழுக்‍கும் தனி அழகைத் தந்தன. சுசீலாவின் தமிழுக்‍கு... 'அமுதென்று பேர்'...

(தமிழுக்‍கு அமுதென்று பேர் - பாடல் (படம் பஞ்சவர்ணக்‍ கிளி))

எத்தனையோ பாடல்கள்... அவை, தமிழோடு புரியாது ஊடல்கள்... உச்சரிப்பிலும், இனிமையிலும் தமிழுக்‍கு பெருமை சேர்த்ததால், பல பெருமைகள் பி. சுசீலாவை வந்து சேர்ந்தன.

(Breath - என்ன என்ன வார்த்தைகளோ - பாடல்) (படம் - வெண்ணிற ஆடை) (பாடல் - 16 வயதினிலே 17 பிள்ளையம்மா) (படம் - அன்னமிட்ட கை) + (ஒரு ஆலயமாகும் மங்கை மனது - பாடல்) (படம் - சுமதி என் சுந்தரி)

சவாலே சமாளி படத்தில் பாடிய சிட்டுக்‍குருவிக்‍கு என்ன கட்டுப்பாடு? பாடலுக்‍கு தேசிய விருது என சுசீலாவின் பாட்டுத் திறமைக்‍குப் பணிந்து, அவரது வீட்டுக்‍ கதவைத் தட்டின பல விருதுகள்...

விருதுகளுக்‍கு மகுடமாய் சுசீலாவுக்‍கு இன்று கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு உட்பட 6 மொழிகளில் 17 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட பாடல்களை தனியாகவும், குழுவினருடனும் இணைந்து பாடியுள்ளதால், அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


திரைப்படப் பாட்டு சாம்ராஜ்யத்தில், தமது திறமையால், குரல் வளத்தால் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் பி. சுசீலா. அவரது பாட்டுப் பயணத்தில், பல இனிமையான பலாச்சுளை 'பல்லவி'கள் தந்ததற்காக இந்த கின்னஸ் சாதனை விருது, சந்தோஷ 'சரண'மாக அவரிடம் 'சரண'டைந்திருக்‍கிறது.

(


பாடல் - ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்) (படம் - தனிப்பிறவி)    (பாடல் - எங்கிருந்தோ ஆசைகள்) (படம் - சந்திரோதயம்) + ஒரு நாள் யாரோ.... படம், மேஜர் சந்திரகாந்த்)

இசையால் யாரையும் வசப்படுத்தலாம்... பல பசுமையான பாடல்களைத் தந்து இசையாகவே வாழ்ந்து கொண்டிருக்‍கிற பி. சுசீலாவை எத்தனை முறை வேண்டுமானாலும் வாழ்த்தலாம்... பி. சுசீலாவால் கின்னஸ் சாதனை விருது, கீர்த்தி அடைந்துள்ளது.

- லாரன்ஸ் விஜயன்
http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-jayamax-5585.html

https://youtu.be/TKAwt2D948o

கவிஞன் கண்ணதாசன்

வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னத கவிஞன் கண்ணதாசன். காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களை தன் திரைப்பட பாடல்களில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட அந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் இன்று... அந்த தன்னிகரில்லா கவிஞனை தமிழர்கள் நினையாத நாள் என்று? கண்ணதாசன் என்ற தமிழ் காவியத்தை அவரது நினைவுநாளில் புரட்டிப்பார்க்‍கிற ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு....


(நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை பாடலின் பல்லவியை ஒலிபரப்பவும் (படம் படித்தால் மட்டும் போதுமா))

திரைப்பட சூழலுக்‍காக கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்ட பாடல் இது என்றாலும், அவரது பாடல்கள் மீது பற்று கொண்ட லட்சக்‍கணக்‍கான ரசிகர்களுக்‍கு இந்த பாடல் வரிகள் கண்ணதாசனின் "அவை அடக்‍கம்" என்பதை ஏற்றுக்‍கொள்ள இயலாது. இந்த பாடலில் பொருட்பிழை இருப்பதாகவே எண்ணிக்‍கொள்வார்கள்.

திரையுலக கம்பனாக, வள்ளுவனாக வற்றாத கற்பனையுடனும், வளமான கருத்துக்‍களுடனும் வலம் வந்த கண்ணதாசன், முத்தையாவாக சூல்கொண்டது சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில்...

1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி இந்தக்‍ கவிதைச் சூரியனுக்‍கு சிறுகூடல்பட்டி கிழக்‍கானது. சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்‍கு 8வது பிள்ளையாக பிறந்தார் முத்தையா. வணிகர் மரபில் பிறந்த கண்ணதாசனுக்‍கு ஆரம்பக்‍கல்வி சிறுகூடல்பட்டியில் அமைந்தது. என்னதான் பள்ளிக்‍கல்வியைப் படித்தாலும், வாழ்க்‍கைக்‍ கல்வி, சமூகத்தில் தான் கிடைக்‍கும் என்பதாலோ என்னவோ? அவரது உயர்கல்வி எட்டாம் வகுப்போடு அவரை விட்டு தூர எட்டிச் சென்றுவிட்டது.

ஆனால் ஞானமோ கைகட்டி சேவகம் செய்தது கண்ணதாசனுக்‍கு. அவர் நாக்‍கில் குளித்து வந்து வார்த்தைகள் தமிழை மேலும் அழகாக்‍கியது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்த புரட்சிக்‍ கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல், கண்ணதாசனின் தமிழ் அமுதென்று பெயர் பெற்றது. சொந்த மண்ணைவிட்டு சென்னை வந்த கண்ணதாசன், பார்க்‍காத பணிகள் இல்லை. நதிக்‍குள் சமுத்திரத்தை அடைக்‍க முடியுமா?. கண்ணதாசன் கடல், அந்தக்‍ கடலில் இருந்து பொங்கி வந்த கவிதை அலைகள் ஓய்வெடுத்துக்‍ கொள்ள முடியாமல், ஓங்கி உயரமாக எழுந்து கொண்டே இருந்தது.

தன் திறமையை தீட்டிக்‍கொள்ள திரைப்படம் என்ற சாணைக்‍கல்தான் சிறந்தது என்ற முடிவுக்‍கு வந்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளை தேடி​போனார். திரைப்படத் துறை பல அவமானங்களையும், அனுபவங்களையும் கண்ணதாசனுக்‍கு கற்றுக்‍ கொடுத்துவிட்டு தனது கனவு தொழிற்சாலையின் கம்பீரமான கதவை மெதுவாக திறந்தது. ஜுபிட்டர் பிக்‍சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி" என்ற திரைப்படத்தில் "கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு. முதல் பாடலிலேயே, உடைந்து போன உள்ளங்களுக்‍கு ஒத்தடம் கொடுக்‍கின்ற ஆறுதலான வரிகள்.

பின்னர், பாட்டுப் பல்லக்‍கில் பயணம் செய்த இந்த ராஜ கவிஞனின் படைப்புகள்தான் எத்தனை? எத்தனை?. காதலா? வீரமா? பாசமா? தாலாட்டா?. மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்‍கும் கண்ணதாசனின் ஒரு பாட்டு கைபிடித்து நடந்தது... ஒரு பாட்டு கண்ணீர் துடைத்தது...

(பாடல் - உன் கண்ணில் நீர்வழிந்தால்... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி)

ஒரு பாட்டு காயங்களுக்‍கு மருந்திட்டது...

(பாடல் - சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் - காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்)

இன்னொரு பாட்டு காதல் சொன்னது...

(பாடல் - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்‍கு...)

பிரிவுத் துயரத்தை பேசியது இந்தப் பாடல்...

(பாடல் - நினைக்‍கத் தெரிந்த மனமே...)

பிரிந்தவர் இணைகையில், பீறிட்டு எழும் அழுகையின் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது இந்தப் பாட்டு...

(பாடல் - காதல் சிறகை காற்றினில் விரித்து..)

மனதையும், உடலையும் வாஞ்சையுடன் வருடும் தென்றலை, மயிலிறகால் வருடி தலைகோதியது இந்த வரிகள்...

(பாடல் - மலர்ந்து மலராத பாதி மலர்போல....)

குறையோடு பிறந்ததால் அநாதையாக்‍கப்பட்டவன், ஆண்டவனைநோக்‍கி அரைகூவல் விடுத்ததை விளம்பியது ஒரு பாட்டு...

(பாடல் - கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...)

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் கண்ணதாசனின் கற்பனையில் வற்றாத நதியாய் ஊற்றெடுத்து கிளம்பின. அவரது பாடல் இடம்பெற்றதாலேயே தமிழின் பல வரிகளுக்‍கு தனி கவுரவம் கிடைத்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி அரசியலுக்‍கு, தன் பாட்டு அரசியலில் அடிக்‍கல் நாட்டியவர் கண்ணதாசன்.

(பாடல்கள்- உலகம் பிறந்தது எனக்‍காக + அச்சம் என்பது மடமையடா + நாடு அதை நாடு + அதோ அந்த பறவைப் போல வாழ வேண்டும் + ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே)

சிட்டுக்‍குருவியை போல விட்டு விடுதலையாக வேண்டும் என்ற பாரதியின் சுதந்திர காற்றை பாட்டு வானில் சஞ்சரிக்‍கவிட்ட கண்ணதாசன். பெண்மையின் உயர்வையும், தன்பாட்டில் உயர்த்திப்பிடித்தான்.

(சிட்டுக்‍குருவிக்‍கு என்ன கட்டுப்பாடு + எல்லாம் நீதானம்மா செல்வம் நீதானம்மா)

கண்ணதாசனின் காதல் பாடல்களின் பல்லவிகள், இளைஞர்கள் தங்கள் காதலிக்‍கு எழுதும் காதல் கடிதங்களுக்‍கு தலைப்புகளாக மாறின.

(பாடல்- உன்னை ஒன்று கேட்பேன் + உன்னைக்‍ காணாத கண்ணும் கண்ணல்ல + நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ? + பார்த்த ஞாபம் இல்லையோ + நெஞ்சம் மறப்பதில்லை + சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்)

கம்பனை, வள்ளுவனை, இளங்கோவடிகளை உருக்‍கி, உவமை பொருத்தி நகை செய்து, அதை பாமரனுக்‍கு அணிவித்த பொற்கொல்லர் கண்ணதாசன். இலக்‍கியங்களின் சாறெடுத்து, கல்வி பயிலாத எளியவர்களுக்‍கும், கவிதை கற்றுத்தந்த கவிதை ஆசான் கண்ணதாசன். எத்தனை எத்தனை நிலா, எத்தனை எத்தனை காய், எத்தனை எத்தனை தேன், எத்தனை எத்தனை ஊர் கண்டவன் கண்ணதாசன்.

(பாடல்கள்- அன்று வந்ததும் இதே நிலா + வான் நிலா நிலா அல்ல + அத்திக்‍காய் காய் + பார்த்தேன் சிரித்தேன் + எந்த ஊர் என்றவனே)

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்ற சோஷலிசம் பெற்றெடுத்த தலைச்சன் பிள்ளையை பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்த்தவன் கண்ணதாசன்.

(பாடல் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்)

தற்கொலை எண்ணத்துடன் தூக்‍குக்‍ கயிறை மாட்டிக்‍கொண்டவனுக்‍கோ அல்லது விஷபாட்டிலை திறந்தவனுக்‍கோ தூரத்தில் இருந்து ஒலிக்‍கும் கண்ணதாசனின் இந்த பாடல், அவனது தற்கொலை எண்ணத்தையே கொலை செய்துவிடும், வாழ்க்‍கைப் பாதையில் மீண்டும் அவனை தடம்பதிக்‍க வைத்துவிடும்.

(பாடல் - வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை...)

வாழ்க்‍கையின் நிலையாமையைக்‍ கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் இப்படி பாட முடியும்?

(போனால் போகட்டும் பாடல் + வீடுவரை உறவு + நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் + தெய்வம் தந்த வீடு )

கண்ணதாசனின் படைப்புகளில் "அர்த்தமுள்ள இந்து மதம்" 4 வேதங்களைத் தாண்டி 5-வது வேதமானது. இயேசு காவியமோ 2-வது பைபிள் ஆனது. வனவாசமோ, கண்ணதாசனின் நிர்வாணத்தை அழகு தமிழ் ஆடைக்‍கட்டிவிட்டு மறைத்தது. சேரமான் காதலி, சாகித்ய அகாடமி விருது பெற்று தந்தது. கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மேடை பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை, கண்ணதாசனிடம் கம்பீரமாக குடியிருந்தது.

கண்ணதாசனின் புகழை வருங்காலம் அறிந்துகொள்ளும் வகையில், அந்தப் பாட்டு பறவைக்‍கு சென்னையில் சிலை​எழுப்பி கவுரவித்தார் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

(Breath)

அரசியல் களத்தில் கண்ணதாசன் பொம்மையைப்போல உருட்டி விளையாடப்பட்டாலும், ஒரு கவிஞனுக்‍குள்ள நேர்மையால் அந்த பொம்மலாட்டத்தை சவாலோடு அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்ணதாசனின் கவிதையில் வெண்பா, வெற்றிபா ஆனது. அறுசீர் விருத்தமோ, அழகியலை ஆடையாய் அணிந்துகொண்டது. செப்பு மொழிகளோ வாழ்க்‍கையின் தத்துவத்தை எதார்த்தமாக சித்தரித்தது.

தமிழர்களின் உணர்வுகளில் பாடலாக, கவிதையாக கலந்துவிட்ட கண்ணதாசன், உடல்நலக்‍ குறைவு காரணமாக 1981-ம் ஆண்டு அக்‍டோபர் மாதம் 17-ம்  தேதி அமெரிக்‍காவின் சிகாகோ நகரில் தனது கடைசி சுவாசத்தை நிறுத்திக்‍கொண்டார். மரணம் மகாபுருஷர்களை என்ன செய்துவிட முடியும்?. மக்‍கள் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்‍கும் மகோன்னத மனிதர்களிடம்தான், மரணம் கூட தோற்றுவிடுகிறது. ஆம் கண்ணதாசனிடமும் மரணம் தோற்றுவிட்டது. காரணம், கவிஞனில் கண்ணதாசன் ஒரு காலக்‍கணிதம். மரணத்தையும் தோற்கடித்த மகா கவிஞன்.

(நான் நிரந்தரமானவன்... அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்‍கு மரணமில்லை)

(ஜெயா ப்ளஸ் செய்திகளுக்‍காக லாரன்ஸ் விஜயன்)



http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-5273.html

https://youtu.be/ED-2p2Wdr0w

இசைக்குயில் ஆஷா போஸ்லே..

மொழியின் ஆதிக்‍கங்களை, என்றோ இசை வென்று காட்டி வெற்றி வாகை சூடிவிட்டது. இனம், மதம், கலாச்சாரம் என்ற எல்லைகளுக்‍குள் தன்னை அடக்‍கிக்‍ கொள்ளாத இசை, ஒரு சில இசை குயில்களிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தஞ்சமடைந்துவிட்டது. அப்படிப்பட்ட இசைக்‍ குயில்களில் ஒருவரான ஆஷா போஸ்லே, இந்தி திரைப்பட உலகின் இசை அரசியாக திகழ்ந்து வருகிறார். உயிர் மூச்சில் இசையை சுவாசித்து வரும் இந்த கானகுயில் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு....

(வாய்ஸ் ஓவர்)





ஆஷா போஸ்லே... இந்த இசைக்‍ குயிலுக்‍கு இன்று 82 வயது. மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கரின் உதிரத்தில் சூல் கொண்டு மகாராஷ்டிர மண்ணில் Sangli மாவட்டத்தில் Goar எனும் இடத்தில் 1933-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8-ம் நாள் பிறந்தார் ஆஷா. "இளமையில் வறுமை கொடிது" என்ற அவ்வையின் வாக்‍குமூலம், ஆஷாவின் வாழ்க்‍கை பாதையிலும் மெய்ப்பிக்‍க தொடங்கியது. ஆஷாவுக்‍கு 9 வயதாக இருக்‍கும்போது அவரது தந்தையை மரணம் அழைத்துச் செல்ல, குடும்பம் வறுமைக்‍கு வாழ்க்‍கைப்பட்டது. பிழைப்பு தேடி ஆஷா போஸ்லேயின் குடும்பம் மும்பைக்‍கு குடிபெயர்ந்தது. மூத்த சகோதரியும், இசை தேவதையுமான லதா மங்கேஷ்கருடன் இணைந்து, ஆஷா நாடகங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் குடும்பத்தில் வசதியாக உட்கார்ந்துகொண்ட வறுமையை விரட்ட தொடங்கினார். மராட்டிய மொழியில் 'மாஜா பல்' என்ற படத்திற்காக 1943-ம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய ஆஷா, பல மைல் கல்லை கடந்துள்ளார்.

(Breath : ஆஷா ‍போஸ்லே பாடல்)




இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் முதல் வெற்றிப் படமான தீஸ்ரி மஞ்சில் என்ற படத்தில் ஆஷா பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஆர்.டி. பர்மனோடு தொழில் முறையில் தொடங்கிய ஆஷாவின் இசைப் பயணம், அவருடன் திருமண உறவாகவும் மலர்ந்தது. 1960 - 1970-களில் தனது இசைக்​கொடியை வானம் வரை பறக்கவிட்ட ஆஷா போஸ்லே, 1995-ம் ஆண்டு ரசிகர்களை வசப்படுத்திய ரங்கீலா திரைப்படம் வரை பாடல்கள் மூலம் பாலிவுட் திரை உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

(Breath : யாதோங் கி பாரத் - ரங்கீலா பாடல்கள்)

ஆஷா தமிழில் பாடிய ​செண்பகமே செண்பககே பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் இசை மணத்தை வீசிக்கொண்டே இருக்கிறது.

(செண்பகமே செண்பகமே பாடல்)

தனது கானக்குரலால் இதுவரை சுமார் 12 ஆயிரம் திரைப்படப் பாடல்க‌ளை வழங்கியிருக்கும் ஆஷா போஸ்லே,  கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சிலும் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, லட்சோப லட்சம் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் ஆஷா போஸ்லேயின் இசைப் பயணம் காலம் கடந்தும் பேசப்படும்...

ஜெயா ப்ளஸ் செய்திகளுக்காக லாரன்ஸ் விஜயன்...

எம்.கே. தியாகராஜபாகவதர் - சிறப்புத் தொகுப்பு

தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நினைவு தினம் இன்று. தான் கொண்ட பாடல் திறனால், நாடக நடிகனாக உருவாகி திரையுலகில் பிரவேசித்து, தமிழ் சினிமா வரலாற்றில் தன்பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் தனி அத்தியாயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அக்‍கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.கே.டி.


என்று அழைக்‍கப்படும் எம்.கே. தியாகராஜபாகவதர் பற்றிய சிறப்புத் தொகுப்பு...

(வாய்ஸ் ஓவர்)

("வாழ்விலோர் திருநாள்..." பாடல்)

"உனைக்‍ கண்டு மயங்காத பேர்கள் உண்டோ?" என்ற பழைய பாடல் வரிகளை, எம்.கே.டி. எனப்படும் எம்.கே. தியாகராஜர் பாகவதருக்‍காக கொஞ்சம் மாற்றி பாடினால் "உன் குரலைக்‍ கேட்டு மயங்காத பேர்கள் உண்டோ?" என்றுதான் பாட வேண்டும்.

தொலைபேசியை கிராகம்பெல் கண்டுபிடித்தப் பிறகு, பல மைல்களுக்‍கு அப்பால் உள்ள நண்பர்கள், உறவினர்கள் குரலை கேட்டவுடன் மகிழ்ச்சி கடலில் மனம் தத்தளித்ததுபோல, பேசும் படம் பிறந்தபின், பல சினிமா ரசிகர்களை இந்த கம்பீரக்‍ குரல் மகிழ்ச்சிக்‍ கடலில் மூழ்கடித்தது. மூழ்கி எடுத்த முத்தாய் கிடைத்தது எம்.கே.டி.யின் பாடல்.

எம்.கே.டி.... தமிழ் சினிமாவின் தவிர்க்‍க முடியாத பெயர். தகர்க்‍க முடியாத பெயர். தற்போது மயிலாடுதுறை என்று அழைக்‍கப்படும் அப்போதைய மாயவரத்தில், கிருஷ்ணமூர்த்தி - மாணிக்‍கத்தம்மாள் தம்பதியரின் மகனாக 1910-ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்தார் தியாகராஜ பாகவதர். பொற்கொல்லர் குடும்பத்தில் உதித்த இந்த இந்த பொன்மகனின் குடும்பம், சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி திருச்சிக்‍கு செல்ல நேரிட்டது. சிறுவன் தியாகராஜனுக்‍கு பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை - பள்ளிப் படிப்பைவிட பாட்டுப் படிப்பது தியாகராஜனுக்‍கு இனித்தது - யார் பாடினாலும், இசை கச்சேரி எங்கு நடைபெற்றாலும் அங்கு சென்றுவிடும் சிறுவன் தியாகராஜன், அந்தப் பாடல்களை அட்சரம் பிசகாமல் அப்படியே பாடி அனைவரையும் வியக்‍க வைப்பான்.



கொக்‍கு வளமான மீனுக்‍காக காத்திருப்பது போல, தன் குரல் வளத்தை ஊருக்‍கு பறைச்சாற்றும் உற்சவத்துக்‍காக காத்திருந்த தியாகராஜருக்‍கு மேடை நாடகங்கள் பாதை அமைத்துக்‍ கொடுத்தன. பாகவதரின் குரல் வளத்தை அறிந்த திருச்சி ரசிக ரஞ்சன சபா நிறுவனர் நடேசய்யர், தனது நாடகக்‍ குழுவில் தியாகராஜனை சேர்த்துக்‍கொண்டார். அரிச்சந்திரா நாடகம்தான் முதல் அரங்கேற்றம். லோகிதாசன் பாத்திரமேற்று தனது இசைத் திறமையை வெளிப்படுத்த, கிடைத்த வாய்ப்பை தியாகராஜன் நன்றாக பயன்படுத்திக்‍கொண்டார். இவரது இசை ஆளுமையால் மயங்கிய மதுரை பொன்னு ஐயங்கார் என்ற வயலின் வித்வான், எந்தக்‍ கட்டணமும் பெறாமல் தியாகராஜனுக்‍கு கர்நாடக இசையை கற்றுக்‍கொடுத்தார். கர்நாடக இசையில் கரைகண்ட எம்.கே. தியாகராஜன், 1926-ம் ஆண்டு திருச்சி பொன்மலையில் நடந்த பவளக்‍கொடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகன் பாத்திரத்தை ஏற்றார். தியாராஜனோடு பாகவதர் அடைமொழியும் அடைக்‍கலமானது.

சுப்புலெட்சமி - பாகவதரோடு ஜோடி சேர்ந்து நடிக்‍க ஆரம்பித்தார். பாகவதர் - சுப்புலெட்சுமி ஜோடி பிரபலமாயிற்று. தமிழகம் தாண்டி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்‍கும் பாகவதர் புகழ் பரவியது. பாகவதரின் நவீன சாரங்கதாரா படப்பாடல்கள் முதன்முதலாக கிராமோஃபோனில் பதிவு செய்யப்பட்டன.

(பாடல்கள்)(சொப்பன வாழ்வில் (சிவகவி) + உனைக்‍ கண்டு மயங்காத  (அசோக்‍குமார்) + மன்மதலீலை (ஹரிதாஸ்)(ஒவ்வொரு பாடலும் 15 செகன்ட்ஸ் மட்டும்)

1934-ம் ஆண்டு பாகவதர் நடித்த "பவளக்‍கொடி" வெளியானது. சினிமா உலகம் பாகவதரை அறியத் தொடங்கியது. ரசிகர்களோ பாகவதரை ஆராதிக்‍கத் தொடங்கினர். ஒரு சிலர், தொட்ட இடம் துலங்கும் என்பார்கள் - பாகவதர் காலடிப்பட்ட சினிமாவின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவரது வெற்றிக்‍கொடி புகழ் கம்பத்தில் கம்பீரமாக பறந்தது- தொடர்ந்து நவீன சாரங்கதாரா, சிந்தாமணி, சத்தியசீலன், அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்‍குமார், சிவகசி, ஹரிதாஸ், ராஜமுக்‍தி, அமரகவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி என்று பாகவதர் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. இதில் ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளியைக்‍ கடந்து வெற்றிவாகை சூடியது.

(பாடல் - மன்மத லீலையை வென்றார் உண்டோ... + அம்பா மனம் கனிந்துருகி + சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்... இன்னும் சில பாடல்கள்...)(ஒவ்வொரு பாடலும் 15 செகன்ட்ஸ் மட்டும்)


மன்மத லீலையை வென்றார் உண்டோ, சாருகேசி ராகத்தில் அமைந்த பாடல்- சாருகேசியை பிரபலமாக்‍கியவர் தியாகராஜபாகவதர் என்றால் அது மிகையல்ல என்று பிரபல இசை விமர்சகர் சுப்புடு கொடுத்த சான்றிதழ், பாகவதரின் இசை திறமைக்‍கு இன்றளவும் சாட்சியாக விளங்குகிறது.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.டி.யின் பாடல்கள், ரசிகர்களுக்‍கு பெரும் விருந்தாக அமைந்தது- அவரது சிகை அலங்காரம், "பாகவதர் கிராப்" என்று புகழ்பெற்றது- அந்தக்‍கால இளைஞர்கள் பலர் பாகவதரைத் தழுவி சிகை அலங்காரம் அமைத்துக்‍ கொண்டனர்- பாகவதரின் தாக்‍கம் அந்த‍கால சினிமா ரசிகர்களை முழுவதுமாக ஆக்‍கிரமித்திருந்தது.

புகழின் உச்சாணிக்‍ கொம்பில் அமர்ந்திருந்த எம்.கே.டி.யின் சிம்மாசனத்தின் கால்கள் சில காலம் கழித்து ஆட்டம் காண ஆரம்பித்தன. லட்சுமிகாந்தன் கொலை வழக்‍கு எம்.கே.டி. மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே. வாழ்க்‍கையை பதம் பார்க்‍கத் தொடங்கியது. வழக்‍கு விசாரணையின் இறுதியில் தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்‍கப்பட்டனர். எனினும், மறுவிசாரணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், பாகவதர் வாழ்க்‍கையில் இறங்குமுகம் தொடங்கியது. விடுதலையான​பிறகு, வெளிவந்த படங்கள் வெற்றி பெறவில்லை.

தங்கத் தட்டில் சாப்பாடு, விருந்தினர்களுக்‍கு அதே பாணியில் விருந்தோம்பல், பலருக்‍கும் உதவும் தயாள குணம் என வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் எம்.கே.டி.- ஆனால், பொருளாதாரம் பல நாடுகளையே புரட்டிப்போட்டு விளையாடுவதுபோல எம்.கே.டி.
வாழ்க்‍கையிலும் தன் ஆட்டத்தைத் தொடங்கி, அவரை ஆட்டம்காண வைத்தது.
பகல் முடிந்து, இரவு தொடங்கும் போது படரும் கறுமை போல, வளமை குடி கொண்டிருந்த பாகவதரின் வாழ்க்‍கையில், வறுமை வலது காலை எடுத்து வைத்து வந்து அமர்ந்தது.
ஒண்டவந்த வறுமை, பாகவதரிடம் ஒட்டிக்‍கொண்டிருந்த வளத்தை, உடல்நலத்தை விரட்டியடித்து அவரிடம் முழுமையாக்‍ கைப்பற்றிக்‍ ‍கொண்டது. சிந்தாமணி படத்தில் பாடிய ... ஞானக்‍கண் ஒன்று இருந்திடும் போதினிலே, ஊனக்‍கண் இழந்தால் உலகிற்குறையுமுண்டோ... என்ற பாடல் அவரது வாழ்க்‍கையை படம்பிடித்துக்‍ காட்டியது. தியாகராஜபாகவதரைப் போல யாரும்  வாழ்ந்தவரும் இல்லை. வீழ்ந்தவரும் இல்லை.

தனது கம்பீரக்‍ குரலால், தமிழ்ச்சினிமாவை திரும்பிப் பார்க்‍க வைத்த தியாகராஜபாகவதரை 1959-ம் ஆண்டு, திரும்பி வர முடியாத இடத்திற்கு மரணம் அழைத்துச் சென்றது. தமிழ் சினிமா பாடல்களின் நான்கரை கட்டை சுருதி, தன் இறுதிப் பயணம் மூலம் இளைப்பாறிக்‍ கொண்டிருக்‍கிறது திருச்சி இடுகாட்டில்....

(பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல் - பாடல் போடவும்)

ஜெயா ப்ளஸ் செய்திகளுக்‍காக லாரன்ஸ் விஜயன்...

http://jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-5299.html

www.youtube.com/watch?v=2rhfuqaNadg&feature=youtu.be