1. தாலாட்டு... தாய்வழியாக குழந்தை முதலில் கற்றுக்கொள்ளும் தாய்மொழி. தாயின் தாலாட்டில் உறங்காத குழந்தையும் உண்டோ? ஆனால், தாலாட்டுப்பாட தாயாகத்தான் இருக்க வேண்டுமா? தாய் உள்ளம் இருந்தாலே போதுமே! எத்தனைக் குழந்தைகளையும் அரவணைக்கலாம். அமைதியின் மடியில் தூங்கவைக்கலாம்.
(பாடல் - 16 வயதினிலே 17 பிள்ளையம்மா... : படம் - அன்னமிட்ட கை)
2. எத்தனைப்பேர் இருந்தாலும், குழந்தைக்கு அன்னையைப்போல் ஆகுமா? உயிர்க்கொடுத்து, உதிரம் தரும் உயிரல்லவா தாய். ஆனால், சில உறவுகள் தாயின் இடத்தையும் நிரப்பத்தான் செய்கின்றன. அதில் அத்தை உறவு குழந்தைக்கு இன்னொரு அம்மா உறவாக அமைகிறது இந்தப் படத்தில். இந்த பாடலில் அன்பின் முகவரி தெரியும். அத்தையின் அருமை புரியும்.
(பாடல் - அத்தைமடி மெத்தையடி... ஆடி விளையாடம்மா... : படம் - கற்பகம்)
3. தூங்க வைப்பது தானே தாலாட்டு? ஆனால், இங்கே விழிக்க வைக்கிறது ஒரு தாலாட்டு.. ஆம்.. குழந்தையைத் தூங்க வைக்கிற தாலாட்டுப் பாட்டு, காதலன் உள்ளத்தில் தூங்கிக் கிடந்த பல எண்ணங்களை விழிக்க வைக்கிறது.. காதலனின் உள்ளத்து உணர்வுகளை எழுப்பி உட்கார வைக்கிறது இந்த காதல் பிரிவின் தாலாட்டு...
(பாடல் - கண்ணன் வருவான் கதை சொல்லுவான்...(சோகப்பாட்டு) : படம் - பஞ்சவர்ணக்கிளி)
4. காயம் பட்ட காதலனை ஆறுதல் படுத்தி, தூங்க வைக்கிற ஆறுதல் தாலாட்டு இது.. மனசு முழுவதும் அமைதியை அடைத்து வைக்கிற ஒரு அன்பின் தாலாட்டு.. அமைதியின் தாலாட்டு இந்த பாடல்...
(பாடல் - தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... : படம் - ஆலயமணி)
5. கணவனின் அன்பை வேறொருத்தியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியநிலை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி, கண்ணீருக்கு தன்னை ஒப்படைக்கிறாள் அன்பான மனைவி.. உயிராய் நினைத்து ஊட்டி வளர்த்த பிள்ளையை விட்டுப்பிரிய பிள்ளையிடமே அனுமதி கேட்கிறாள்... கண்ணீரால் யாசிக்கும் இந்த பாடல், ஒரு தாயின் கதறல் தாலாட்டு...
(பாடல் - அன்னமிட்ட கைகளுக்கு... : படம் - இருமலர்கள்)
6. பெண்களை தெய்வமாக போற்றும் இந்த நாட்டில், பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள்?.. குடும்பம், உறவுகள், சமூகம், பணியிடம் என எல்லா பந்தங்களிலும், இடங்களிலும் பெண்கள் சந்திக்க வேண்டிய சங்கடங்கள் தான் எத்தனை எத்தனை?.. நிராயுதபாணியாக, ஆனால் போராளியாக வாழவேண்டிய பெண்ணுக்கு தூக்கம் எப்படி வரும்?.. பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் அவள் மீது சுமத்தப்படுகிற பொறுப்புக்களும், பணிகளும், அவளைத் தூங்க விடுமா?.. தூக்கத்தில் கனவு வரும்.. ஆனால், பெண்ணாகப் பிறந்தவளுக்கோ, தூக்கமே கனவாகி விடுகிறது.. இந்த பாடல், பெண்ணின் போராட்ட வாழ்க்கையை உண்மையாக்கிவிடுகிறது...
(பாடல் - காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.. : படம் - சித்தி)
7. குழந்தைக்கு மட்டும் தான் தாலாட்டா என்ன?.. காதலிக்கு காதலனும், காதலனுக்கு காதலியும் குழந்தைகள் தானே?... காதல் குழந்தைகள் மடிமீது தலை வைத்து பாடுகிற காதல் தாலாட்டு இது...
(பாடல் - மடி மீது தலை வைத்து... : படம் - அன்னை இல்லம்)
8. பெண் குழந்தைகள், பெரும் செல்வங்கள்... தாய்-தந்தை இருவரும், தாங்கள் பெற்ற பெண் பிள்ளைகள் இருவரை பேணி வளர்க்கின்றனர்.. குழந்தைகளை ஆரத்தழுவி கொஞ்சி மகிழ்ந்து, பாசம் மிக்க மான் குட்டியே என விளித்து தாய் தந்தை இருவரும் சேர்ந்து பாடுகின்றனர் தாலாட்டு... இந்த பாடல்... பெற்றோர் தாலாட்டு...
(பாடல் - நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே... : படம் - பார் மகளே பார்)
9. பெற்றால்தான் பிள்ளையா?... குழந்தைகள் எல்லோரையும் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து பாசம் பொழிய வேண்டும்.. அன்பு மனங்கள் இதைத்தான் செய்யும்.. யாரோ பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாய் நினைத்து தாலாட்டு பாடுகிறான் இந்த நாயகன்... சுயநலமில்லாத சுத்தமான தாலாட்டு இந்த பாடல்...
(பாடல் - செல்லக்கிளியே மெல்லப்பேசு... : படம் - பெற்றால்தான் பிள்ளையா)
10. தாத்தா - பாட்டி கதை சொல்லி கேட்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள்.. ஆனால், கூட்டுக்குடும்பத்தின் ஒவ்வொரு செங்கலும் சுயநல சுத்தியல்களால் உடைக்கப்படும் இந்த காலக்கட்டத்தில், கதை சொல்லிகளான தாத்தா-பாட்டிகள் காணாமல் போய்விடுகிறார்கள்.. தன் தாய், தனக்குப் பாடிய தாலாட்டை, நாயகியைத் தூங்க வைக்க பாடுகிறான் நாயகன்... இது நாயகன் தாலாட்டு...
(பாடல் - இந்த பச்சைக்கிளிக்கொரு... : படம் - நீதிக்குத் தலைவணங்கு)-(ஜேசுதாஸ் பாடியது)
11. தங்கைக்குப் பிறந்த குழந்தையை தன் குழந்தையாக பாவிக்கிறாள் அக்கா... தாய்ப்பாசத்தைப் பொழிந்து குழந்தையை வளர்க்கிறாள்.. பாசமாக வளர்த்த குழந்தையை தங்கை கொண்டு சென்றுவிடுவாளோ என்ற அச்சத்தில் பொத்தி பொத்தி வளர்க்கிறாள் சகோதரி... பாசத்தை சகோதரியிடம் பகிர்ந்துகொள்ள முடியாத அக்காவின் தாலாட்டு தான் இது...
(பாடல் - பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று... : படம் - அன்னை)
12. பிள்ளைகளால் படித்து தெரிந்துகொள்ள முடியாத பிள்ளைத் தமிழை, ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பது போல, அண்ணன், தன் தங்கையை எப்படியெல்லாம் வளர்த்தான்.. தங்கை, அண்ணனை எப்படியெல்லாம் மதித்தாள்... பிறந்த கதை, வளர்ந்த கதை, வாழ்ந்த கதை, பிரிந்த கதை.. இதையெல்லாம் அண்ணன், தன் குழந்தைக்கும், தங்கை, தன் குழந்தைக்கும் சொல்லி உணர்த்துகிற தாலாட்டு இது... பாசத்தின் தாலாட்டு...
(பாடல் - மலர்ந்தும் மலராத பாதி மலர்போல... : படம் - பாசமலர்)
13. அன்பு காட்டி, அரவணைக்கிறவர்கள் இருக்கும் வரை இங்கு யாருமே அநாதைகள் இல்லை.. அநாதை என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே எடுத்துவிடத் துடிக்கிற ஒரு மனிதனின் அன்புத் தாலாட்டு...
(பாடல் - செல்லக் கிளிகளாம் பள்ளியிலே... - படம் - எங்க மாமா)
14. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள். சூழ்நிலைகளின் சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட அபலைப் பெண்ணிற்கு ஆதரவு தருகிறான் நல்ல உள்ளம் படைத்த ஒருவன்... அவளை தங்கையாக பாவிக்கும் அவன், அவளுக்கு பிறந்த குழந்தையை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறான். குழந்தைக்கு தந்தை பொறுப்பை ஏற்கிறான். மகன் போன்றவனுக்கு தந்தையாய் மாறிய நல்ல உள்ளம் பாடும் தந்தை தாலாட்டு இது...
(பாடல் - பிள்ளைக்குத் தந்தை ஒருவன்.... - படம் - பார்த்தால் பசிதீரும்)
15. குழந்தைக்கு தாய் பாடுவது தாலாட்டு. ஆனால், தாய் தந்தையரை தூங்க வைப்பதற்காக குழந்தை பாடும் இந்த தாலாட்டு... இது குழந்தை தாலாட்டு...
(பாடல் - பச்சை மரம் ஒன்று.... படம் - ராமு)
16. கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய தன் குழந்தையையே புகுந்த வீட்டுக்கு காணிக்கையாய் தருகிறாள் நாயகி, நாயகனிடம் அறிவிக்காமல். கொந்தளிக்கிறான் நாயகன். தன் பாச அரும்பை பிரிந்த தவிப்பில் பாடுகிறான் நாயகன். பாட்டு வழியிலேயே தன் பக்க நியாயத்தை உணர்த்துகிறாள் நாயகி. குழந்தையில்லா வெறும் தொட்டிலை ஆட்டி பாடும் வித்தியாசமான தாலாட்டு இது...
(பாடல் - மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... படம் - பணம் படைத்தவன்)
-லாரன்ஸ் விஜயன்